Archive for April, 2010

புதிய வானம் புதிய பூமி

யுத்தங்கள் மண்ணில் ஓயவில்லை
யுகவர்க்கங்கள் இன்னும் தீரவில்லை
அடாவடிகள் இன்னும் அழியவில்லை
அடிமைச் சாசனங்கள் இன்னும் தேயவில்லை.

அடக்குமுறைகள் இன்னும் ஆறவில்லை
அராஐகங்கள் இன்னும் ஒழியவில்லை
மரண ஓலங்கள் இன்னும் மாறவில்லை
மனித நேயங்கள் இன்னும் காணவில்லை.

எல்லைக் கோடுகள் இனி நீங்குமா?
எதிரி படையெடுப்பின் நிலை மாறுமா?
இரத்தங்கள் நித்தம் சிந்துமா?
இளைய தலைமுறைகள் நாளும் மடியுமா?

கல்லறைகள் நித்தம் தொடருமா?
கண்களில் இரத்தம் வடியுமா?
காலங்கள் இனி மாறுமா?
கடை யுத்தங்கள் இனத்தீருமா?

மாறும் காலங்கள் வெகு தூரமில்லை
மக்கள் வாழ்க்கையோ இனி அலறலில்லை
மண்ணின் விடிவுக்கோ இனி உதயமுண்டு
மனித படைப்புக்கோ ஒரு நோக்கமுண்டு.

மரணங்கள் அங்கு ஏதுமில்லை
மனித நேயங்கள் கெம்பீகரிக்கும்
முந்தினவை என்றும் ஒழிந்து போகும்
முகங்களோ இனி மலர்ந்துபோகும்.

புதிய வானத்தை இனி பார்த்திடுவோம்
புதிய பூமியில் என்றும் வாழ்ந்திடுவோம்
புரியும் உண்மையில் நீ மகிழ்ந்திடு
புதிய தென்பினில் இனி உறங்கிடு.

படைப்பாளனோ இதை மாற்றுவான்
பகுத்துணர்வோன் இதை நோக்குவான்
புதிய வானத்தை இனி பார்த்திடுவோம்
புதிய பூமியில் என்றும் வாழ்ந்திடுவோம்.

பாலை வனங்கள் நீர் சுரக்கும்
பாழ் நிலங்கள் பயிர் செளிக்கும்
உலகம் அது புதிது
உரிமை அங்கு பெரிது

நீதி ஒளி கொடுக்கும்
நியாயம் நிலை எடுக்கும்.
சத்தியம் அதன் கொடி
நித்தியம் அதன் படி
புதிய வானம் அதைக் காண்போம்
புதிய பூமி அங்கு வாழ்வோம்.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

உயிருள்ள வார்த்தை

வார்த்தையில் ஜீவனுண்டு
வல்லமையில் பலமுண்டு
வாசித்தால் அறிவுண்டு
நேசித்தால் வாழ்வுண்டு

இருபுறமும் கருக்குண்டு
எப்புறமும் நேர்மையுண்டு
ஊடுருவும் வலிமையுண்டு
உணர்வுதரும் எளிமையுண்டு.

ஊனை உருக்கிடும்
உணர்வை மதித்திடும்
கணுவை பிரித்திடும்
அணுவை உடைத்திடும்

ஆவியை தரமிடும்
ஆத்மாவை உரமிடும்
இதயத்தை வகையிடும்
நியமத்தை தொகையிடும்.

பதிவின் தேக்கம்
பரிசுத்த ஆக்கம்
படைப்பின் ஏக்கம்
பயனின் நோக்கம்

உயிரின் ஊற்று
உண்மையின் சாற்று
உடைமையில் முத்து
உலகின் சொத்து.

பெருமையின் வீழ்ச்சி
தாழ்மையின் உயர்ச்சி
கலகத்தின் தொடர்ச்சி
துன்பத்தின் இடர்ச்சி

பாவத்தின் அடி
மரணத்தின் பிடி
அன்பின் ஒளி
மீட்பின் வழி

கண்களின் தெளிவு
கடவுளின் வார்த்தை
உண்மையின் ஊற்று
உயிருள்ள வார்த்தை.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

வறுமையில் அவள் காதல் வெறுமையானபோது.

புன்னகைத்தாள்
என் இதயத்துள்
புதைந்து கொண்டாள்
பூரித்தேன் என்னை
மறந்து நேசித்தேன்
ஏன்?………..?
அவள் கண்களும் எண்ணங்களும்
அவள் உதடுகளும் உணர்வுகளும்
அவள் சிந்தனையும் செயலும்
அவள் அழகும் சிரிப்பும்
அவளிடம் சிறையாக்கின.

அதிகம் அதிகம் நேசித்தாள்
ஆகாயத்தில் பறந்தேன்
பறவைகளின் வேகத்தைவிட
பல மடங்கு பறந்தேன்
ஏன்?……….?
அவளை நினைக்க நினைக்க இனித்தது
நினைவுகளில் அவளை சுமந்தேன்
காட்டுத் தீயின் வேகத்தை விட
காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தை விட
அவளின் பாச அலை என்னில் படர்ந்தது
நீ இல்லையேல் நெருப்பாகி
சாம்பல் ஆவேன் என்றாள்

உயிரோடு உயிரானாள்
உணர்வுகளில் சங்கமித்தாள்
இதமாக இதயத்துள் குடியிருந்தாள்.
ஆனால்…….எதுவரை?
சுனாமி என்னை சுக்குநூறாக்க
சுவாசிக்க காற்றும்
அருந்த நீரும்
உறங்கத் தரையும்
உடலும் உயிரும் மிஞ்சியது
என்னவளைத் தேடினேன்
ஏன்?……….
அவள் மட்டும் எனக்கு
ஆறுதலின் ஊற்றும்
அணைப்பின் தஞ்சமும் ஆனவள்
ஆனால்……….
வெறுமையாக கண்ட என்னை
வெட்டாந்தரையில் விட்டுவிட்டாள்
நான் என் கரங்களை நீட்டினேன்
வா என்று வரங்களைக் கேட்டேன்
கெஞ்சினேன் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன்

ஒட்டிய தூசியை தட்டுவது போல்
என்னைத் தட்டிவிட்டாள்
சுனாமியும் என்னை வறுமையாக்கியது
அவளும் என்னை வெறுமையாக்கினாள்

சுனாமியும் உயிர்களை அழித்தது
அவளும் காதலின் கருவை அழித்தாள்
சுனாமியின் பலியை விட
அவள் காதலின் வலி என்னை சாகடித்தது
ஏன்?……….
வறுமையில் அவள் காதல் வெறுமையானபோது.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

என் சுவாசக் காற்றே!!!!

  
    

நிலவே உன் முகம் காட்டு
நிணலாக நான் தொடர்வேன்

கண்ணே உன் விழிகாட்டு
கண்ணிமைக்குள் சிறையாவேன்.

இதயத்தில் குடியிருக்க
இடம்தேடி நான் வருவேன்

இல்லையென்று நீ சொன்னால்
இனி யேது என் வாழ்வு.

இரு என்று நீ சொன்னால்
இருப்பதெல்லாம் உன் வாழ்வு

காற்றாக நான் வருவேன்
கண்ணே அதை மூச்சாக்கு.

நதியாக நீ வந்தால்
நான் அருகே கொடியாவேன்

பூவே நீ இதழானால்
புகுந்திடுவேன் வண்டாக.

என்னுக்குள் உன்னிதயம்
எப்போது சங்கமிக்கும்?

பொக்கிஷமாய் காத்திடுவேன்
பூவாக வைத்திருப்பேன்.

என்னவளே என்பாதி
எப்போது நீ ஆவாய்?

அதுவரைக்கும் காத்திருப்பேன்
ஆயுள்வரை பாத்திருப்பேன்.

என் சுவாசக்காற்றே…நீ
என்னிதயம் நிரப்பிவிடு

இல்லை என்று நீ சொன்னால்
என் மூச்சு நின்றுவிடும்.

ஆக்கம்.
திருமலைத்தென்னவன்

தொட்டில்

கருவறையில் தொட்டசொந்தம்
கடைசிவரை விட்டிடாமல்
கல்லறைக்குப் போகும்வரை
தொடரும் சொந்தம்
தொட்டில் சொந்தம்.

கருவாகி  நீ உருவாகி
காலங்கள் வரும்வரைக்கும்
சிசுவே நீ சிலகாலம்
உறங்குகிறாய் தாய்வயிற்றில்
உனைத்தாங்கும் தொட்டிலாக.

உலகத்தில் நீ வந்து
உறுதியுடன் பாதங்கள்
உனைத்தாங்கும் காலம்வரை
உறங்குகிறாய் தொட்டிலிலே
உன்வளர்ச்சி மேலோங்க.

உன்வாழ்வு நாளெல்லாம்
ஓடுகின்றாய் சக்கரமாய்
ஒருநாளில் பலமணிகள்
உறங்குகிறாய் சுமைபோக்க
உனைமறந்து தொட்டிலிலே.

உன்காலம் ஓடும்வரை
உறங்குவதில் முடிவில்லை
கருவினிலும் சிசுவினிலும்
குழந்தையிலும் இளைஞனிலும்
உறங்குகிறாய் தொட்டிலிலே.

முதிர்ந்தபினும் உறங்குகிறாய்
உதிர்ந்தபினும் உறங்குகிறாய்
ஊர்வலத்தில் நால்வருனை
சுமந்துசெல்லும் போதினிலும்
உறங்குகிறாய் தொட்டிலிலே.

கருவினிலே தொட்டசொந்தம்
உயிர்போயும் ஒட்டும்சொந்தம்
உறவுகள்தான் விட்டாலும்
தொடரும் சொந்தம்
தொட்டில் சொந்தம்.

                        ஆக்கியோன்
                        திருமலைத்தென்னவன்.

கட்டில்

 

உயிரை பூமியில் உருவாக்கி
உதிரம் மட்டும் சிகப்பாக்கி
உறவை அதிலே பலமாக்கி
ஆணும் பெண்ணும் இரண்டாக்கி
ஆண்டவர் இணைத்தார் துணையாக்கி.

ஆதியில் படைத்த சோடிகளை
ஆண்டவர் சேர்த்தார் கூடியதை
கணவன் மட்டும் சொந்தமிட
கட்டளை இட்டார் சாட்சியிட
கட்டில் சொந்தம் புனிதமிட.

மஞ்சம் அசுசிப் படாமலே
மனதில் வஞ்சம் தொடாமலே
அன்பின் பலத்தை விடாமலே
ஆக்கும் சொந்தம் மஞ்சமே
அதுதான் கட்டில் பந்தமே.

கட்டிலின் உறவை பலமாக்கி
கருத்தினில் ஒற்றுமை இனிதாக்கி
தொட்டிலின் வரவை உருவாக்கி
தொடர்ந்திட உயிர்கள் பலவாக்கி
தொடுத்தான் இறைவன் மணமாக்கி.

உயிர்கள் எத்தனை வகையுண்டு
உறவுகள் எத்தனை தரமுண்டு
உணர்வுகள் எத்தனை பலமுண்டு
கட்டிலின் மஞ்சம் கணவனுக்கே
கட்டளை ஆண்டவன் மனிதனுக்கே

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

மாணவன்

கருவறையில் உனைத்தாங்கி
காலமெல்லாம் கண்விழித்து
காத்தவள் தாய்
உருவங்கள் தோன்றாமுன்னும்
உருவேற்றி அவயம்தர
உயிர்முச்சு தந்தவள்தாய்

உலகினிலே நீவாழ
உருக்குலைந்து தனையுருக்கி
உதயியவள் தாய்.
கற்பதற்கு பக்குவமாய்
கருவறையில் மாணவனாய்
கற்றவன்நீ தாயிடமே.

காலமெல்லாம் மதிப்பதற்கு
காணாது உன்தேவை
காத்திடுநீ அவள்தேவை.
கல்வியைநீ பயில்வதற்கும்
கலையைநீ வளர்ப்பதற்கும்
ஆசிரியரோ உன்வாழ்வில்
ஆணிவேராய் ஆனார்கள.

அவர்களை நீ மதிப்பதற்கு
அளவில்லை உன்வாழ்வில்
அறிவினிலே உயர்ந்தவனாய்
அன்பினிலே கலந்தவனாய்
கற்பினிலே சிறந்தவனாய்
கண்ணியத்தில் முதிர்ந்தவனாய்
காலமெல்லாம் நீசிறக்க
காத்திடுஉன் இதயத்தை
கற்பதில்நீ மாணவனாய்.

மாணவனாய் நீயிருந்தால்
மனதிற்க்கு இனிமையுண்டு
மலைகளுக்கு உயரமுண்டு
மலர்களுக்கு மணமுண்டு
மாணவனுக்கு எல்லாமுண்டு.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

நட்பு காதலாகுமா?

என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன…………

பல மணி நேரங்கள்
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை

ஏன்?
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?….
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வருவேண்டும்?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள்
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா?..

 ஆக்கம்
திருமலைத்தென்னவன்

உயிரோடு கலந்தவள்

 

உயிரே என் உயிரே நீ
உனையின்றி என்வாழ்வு
உணர்வின்றி வாடுதடி
உறவுன்னை தேடுதடி

உள்வாங்கும் மூச்சுக்கூட
உன்பெயரை உச்சரித்து
உறங்குகின்ற நினைவுகளை
உரசுதடி நித்தமதில்.

இன்றுநம் வாழ்வினிலே
இடைவெளிகள் ஆனதென்ன?
இருள்சூழ்ந்து கொண்டதென்ன?
இனிமைவிட்டுப் போனதென்ன?

நீரில்லா முகிலெதற்கு?
நிலவில்லா வானெதற்கு?
நீயில்லா வாழ்வெதற்கு?

விழியிரண்டும் உனைத்தேடி
விடிவுகளில் உறக்கமில்லை
விடியல்களின் தாரகையே
விரைந்துநீயும் வாராயோ

சிறையிலிட்டு அடைத்தாலும்
சிறகைத்தனும் உடைத்தாலும்
சிந்திரத்தம் வடிந்தாலும்

உன்நினைவு மாறாது
உள்ளமதை வதைத்தாலும்
உயிரையது எடுத்தாலும்
உயிரோடு கலந்தவளே
உன்நினைவு மாறாது.

உலகமது எதிர்த்தாலும்
உடலையது எரித்தாலும்
உயிரோடு கலந்தவளே
உன்நினைவு மாறாது

அடித்தாலும் உதைத்தாலும்
அழித்தாலும் புதைத்தாலும்

எரித்தாலும் சாகாது
என்னிதயம் வேகாது
என்றுமுனைச் சேராமல்
என்னோடு கலந்தவளே.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

அவள் மிகவும் அழகானவள்

கருமேகநிறமுந்தன் கார்கூந்தல்
கடலலையாய் வீசிட.
வானவில்லின் வளைவுகளாய்
உன்புருவங்கள் வளைந்திட.
பறவைகளின் சிறகுகளாய்
உன்னிமையிரண்டும் அடித்திட.

விழியிரண்டும் அவைகயல்மீனின்
கண்களைமிஞ்சிட.
உன்கன்னங்கள் அவைஅப்பிள்
சின்னங்களைவென்றிட.
நீசிரிக்கும்போது உன்னழகான பற்கள்
அவை மாதுளமுத்துக்களாய் யொலித்திட.
உன்இதழிரண்டும் அவைதித்திக்கும்
தேனிலும் தெளிதேனாய் பாய்ந்திட.
உன்கழுத்து அவைஆழ்கடலில்
கண்டெடுத்த அழகானசங்கைவிட உயர்நதிட.
உன்மார்பகங்கள் அவைதாமரைமொட்டைத்தாங்கிடும்
தடாகமொட்டாய் ஆடவரின்கனவுக்குள் புகுந்திட.
உன்பாதங்களின் அசைவினால் கொடியிடை
அதுபின்னழகின் வனப்பில் நடனமிட.

ஒநீவானத்தில் நீந்துகின்ற நிலவோ?அல்ல
வசந்தத்தில் வாழ்கின்ற மலரோ?
நான்கல்லை சிலையாக்கினேன்
வார்த்தைகளை கவிதையாக்கினேன்
மலர்கொண்டு சரம்தொடுத்தேன்
தூரிகைகொண்டு ஓவியம்படைத்தேன்
அதுஎங்கும் உன்னழகுவிம்பங்கள்
இதுவென் ஆத்மாவின் பிரமையல்ல
அதுவுன் அழகுசிகரத்தின் மயக்கம்.

எதிலும் உன்னெண்ணம்
எங்கும் உன்வண்ணம்
நீஅழகின் புதுவண்ணம்
இது என் ஆத்மாவின் உள்ளெண்ணம்
அது ஆண்டவனின் நல்லெண்ணம்
ஆழமான உன்னழகின் படைப்பு
ஆண்டவனின் கைவண்ண வடிப்பு
என்நாடியின் ஓயா அடிப்பு
உன்பெயரின் தேயா துடிப்பு
நான்விடும் முச்சு உன்வசமாச்சு
எந்தன் பேச்சு நீதானாச்சு.

     ஆக்கியோன்
திருமலைத்தென்னவன்